மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற கோவிட்-19 விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நிறைவு
மத்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவகம் சார்பாக மதுரை மாநகராட்சி ஒத்துழைப்புடன் மாநகராட்சி பகுதிகளில் கோவிட்-19 தொற்று பாதிப்பு உள்ள ஏரியாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்பகுதிகளில் 12.10.2020ம் தேதி துவங்கி 16.10.2020 வரை ஐந்து நாட்கள் தீவிர விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.. 12.10.2020 ம் தேதி துவங்கிய இப்பிரச்சாரத்தை மாநகராட்சியின் முதன்மை நகர் நல அலுவலர் மருத்துவர் குமரகுருபரன் மண்டலம் எண்-2 அலுவலகத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் திரு பிரேம்குமார், உதவி செயற்பொறியாளர் திரு மனோகரன், தேசிய வாழ்வாதார இயக்க அலுவலக உதவி திட்ட அலுவலர் திருமதி வனிதா, சுகாதார அலுவலர் திரு ராஜ்கண்ணன் மற்றும் தூய்மை பாரத ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.
பிரச்சாரத்தின் முதல்நாள் எஸ்.எஸ்.காலனி, பொன்மேனி நாராயணன் பிள்ளை வீதி, பாரதியார் வீதி மற்றும் காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரம் செய்யப்பட்டது.
இரண்டாம் நாள் மேலமடை, தாசில்தார் நகர், குறிஞ்சி வீதி, எம்.ஜி.ஆர்.வீதி, ராஜா வீதி, கல்லூரி வீதி மற்றும் கோமதிபுரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மூன்றாம் நாள் இந்திரா நகர், முல்லை நகர், இமயம் நகர், ஆணையூர், சாந்தி நகர், கூடல் நகர், ரிசர்வ் லைன், புதூர் வண்டிப்பாதை, ஆத்திகுளம் மற்றும் ஏஞ்சல் நகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
நான்காம் நாள் பிரச்சாரம் தெப்பக்குளம், சின்ன அனுப்பானடி, நாயுடு வீதி, நடுத்தெரு, மேலத்தெரு, மேல அனுப்பானடி மற்றும் தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இறுதிநாள் பிரச்சாரம் கோச்சடை மற்றும் நட்ராஜ் நகர் பகுதிகளில் நடைபெற்று இறுதியாக கூடல் நகர் பகுதியில் முடிவுபெற்றது
பிரச்சாரம் மேற்கொண்ட ஐந்து நாட்களும், அனைத்து பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் வீடுகள் மற்றும் கடைகள் தோறும் விநியோகிக்கப்பட்டன. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் அரசின் ஆணைகளை மதித்து நடத்தல் ஆகியவற்றின் முக்கியத்தும் குறித்த ஆடியோ ஒலிபரப்பும் மற்றும் போஸ்டர் கண்காட்சியும் இடம்பெற்றது.
நிகழ்ச்சியான ஏற்பாடுகளை கள விளம்பர உதவி அலுவலர் திரு வேல்முருகன் செய்தார்.